ஜெர்மனியில் திடீரென வெடித்த மீன் அக்வேரியம்! துடிதுடித்து இறந்து போன அரியவகை மீன்கள்!

fish aquarium
fish aquarium
Updated on

ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினில் சுமார் 1,500 மீன்கள் உள்ள பெரிய அக்வாரியம் ஒன்று, திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் அங்குள்ள சாலையில் 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனால் அங்குள்ள சாலையெங்கும் வண்ண வண்ண அரியவகை மீன்கள் சிதறி துடிதுடித்து இறந்து கிடந்தன. அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. அந்த இறந்த மீன்களை பறவைகள் கொத்தி சென்றது.

fish aquarium
fish aquarium

பெர்லினின் மிட்டே மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ரேடிசன் ஹோட்டல் மற்றும் அக்வாரியம் உள்ளது. அங்குள்ள உருளை வடிவ அக்வாரியம் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில் பரபரப்பான முக்கியச் சாலையில் ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் மற்றும் குப்பைகள் வெடித்து சிதறின. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

fish aquarium
fish aquarium

‘சீ லைஃப் பெர்லின்’-ஐ பொறுத்தவரை, இந்த உருளை வடிவ அக்வாரியம்தான் உலகின் மிகப் பெரிய ஃப்ரீஸ்டாண்டிங் அக்வாரியம் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் உயரம் 46 அடி ஆகும். ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் கூறுகையில், அக்வாரியம் வெடித்தது ஒரு நிலநடுக்கம் போல் உணரப்பட்டது என்றும், இச்சம்பவம் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும், நிறைய உயிரிழந்த மீன்கள், குப்பைகள் என இந்த இடம் காட்சியளித்ததாகவும் கூறினர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஹோட்டலில் தங்கியிருந்த சுமார் 350 பேரை உடனடியாக வெளியேற்றினர். அக்வாடோம் வெடித்ததற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று பெர்லின் தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com