மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நாடு முழுவதும் நூறு ஆரோக்கிய உணவு வீதிகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அதை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதோடு, அவற்றை ஊக்கப்படுத்துவதன் மூலமாக மக்களின் உடல் நலப் பிரச்னைகளை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் சோதனை முயற்சியாக ஒவ்வொரு உணவு வீதிக்கும் தலா ஒரு கோடி ரூபாயை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் தேசிய சுகாதார இயக்கம் வழங்க இருக்கிறது. பாதுகாப்பான குடிநீர், கை கழுவுதல், கழிவறைகள், முறையான திரவம் மற்றும் திடக்கழிவுகளை அகற்றுதல் முதலான வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த ஒரு கோடி ரூபாய் நிதி பயன்படுத்தப்பட இருக்கிறது.
மத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தொழில்நுட்ப உதவியுடன், தேசிய சுகாதார இயக்கத்தின் வாயிலாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நான்கு உணவு வீதிகளும், புதுச்சேரியில் ஒரு உணவு வீதியும் அமைக்கப்பட்டு உள்ளது.