

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி இன்று இந்தியா வந்துள்ளார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மெஸ்ஸி வந்துள்ளதால் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அர்ஜென்டினா அணியின் கேப்டனான லயோனல் மெஸ்ஸி மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள இவர் தனது 70 அடி உயர பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கிறார். 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள இந்த கால்பந்து ஜாம்பவானைக் காண சால்ட் லேக் மைதானத்தில் காலை முதல் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
உலக கால்பந்து 'கோட்' என்று அழைக்கப்படும் மெஸ்ஸி இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். 2022 FIFA உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் 'GOAT Tour of India 2025' என்ற மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள அவரைக் கண்டு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர்.
கொல்கத்தா முழுவதும் அவரது கட்அவுட்கள், சுவரொட்டிகள் பல இடங்களில் அலங்கரிக்கின்றன.
கொல்கத்தாவில் லேக்டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்ஸியின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. வெறும் 40 நாட்களில் உருவாக்கப்பட்ட இந்த சிலை உலகத்திலேயே மெஸ்ஸிக்கு வைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய சிலை இதுதான் என்று கூறப்படுகிறது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை காணொலி மூலம் மெஸ்ஸி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
மெஸ்ஸியின் வருகையை ஒட்டி அங்கு 78 ஆயிரம் இருக்கைகள் வசதி கொண்ட சால்ட் லேக் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் 7000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், நடிகர் ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். மெஸ்ஸியின் தீவிர ரசிகரான ஷிப் ஷங்கர் பத்ராவை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 56 வயதான இவர் தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்து அழகு பார்த்ததுடன், தான் நடத்திய டீக்கடையை அர்ஜென்டினா ரசிகர்கள் கிளப் என்ற பெயருக்கு மாற்றியவர். மெஸ்ஸியைக் காண ஆர்வமாக உள்ள இவர் 7,000 ரூபாய்க்கு இரண்டு டிக்கெட் வாங்கியுள்ளார். அவரை இப்பொழுது நேரில் பார்க்கும் ஜாக்பாட் பரிசும் அடித்துள்ளது.
மெஸ்ஸி கொல்கத்தாவில் இருந்து பிற்பகல் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு இரவு ஹைதராபாத் மைதானத்தில் நட்பு கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விட்டு நாளை மும்பைக்குச் செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார். 15ஆம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு அங்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடுகிறார். ஹைதராபாத்தில் மெஸ்ஸியுடன் 100 பேருக்கு மட்டுமே போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு செல்பி எடுத்துக் கொள்ள ரூபாய் 10 லட்சம் கட்ட வேண்டும் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.