

வெள்ளியங்கிரி மலையேற இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி ஈசன் 7வது மலையில் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இக்கோவிலுக்கு வனத்துறை எல்லா காலங்களிலும் செல்ல அனுமதிப்பதில்லை. காரணம் இக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், மலை மீதும் நடந்து செல்ல வேண்டும் என்பதால் மழை மற்றும் குளிர்காலத்தில் செல்ல அனுமதி அளிப்பதில்லை. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கோர்ட் உத்தரவு காரணமாக தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இங்கு செல்வதற்கு உடல் தகுதியுடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டாம் என்றும், பக்தர்களின் வசதிக்காக வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் கோவை மாவட்ட வன அதிகாரி கூறியுள்ளார்.
மலையடிவாரத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, உடல் தகுதியுடன் இருக்கும் பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 3, 6 மற்றும் 7வது மலையில் மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்றும் அதில் மருத்துவ ஊழியர்களுடன் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்றும் கூறினார். வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அடிவாரத்தில் தயாராக இருப்பதுடன், மலை மேல் 8 பேர் கொண்ட கண்காணிப்புக்கு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். சென்ற வருடம் மலையேறிய 9 பேர் உயிரிழந்ததால் தற்போது உயிரிழப்பை தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மலை மீது பக்தர்கள் யாரும் போதைப் பொருட்கள் உபயோகிக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து கண்காணித்து பிளாஸ்டிக் கவர்கள் இருந்தால் அவற்றை எடுத்துவிட்டு காகிதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.