மேற்குத் தொடர்ச்சி மலை போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டு தீ!

மேற்குத் தொடர்ச்சி மலை போடி குரங்கணி மலைப்பகுதியில் காட்டு தீ!
Updated on

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க வனத் துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வந்தது. இதில் மரங்கள், மூலிகைகள் எரிந்து அழிவடையும் நிலையில் இருந்தது பற்றி எரியும் காட்டுத் தீயினால். இந்த தீயில் பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து அழிவடைந்துள்ள நிலையில் வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்தி வந்தனர்.

தற்போது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள குரங்கணி மலைப்பகுதியில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. புலியூத்து வனப் பகுதியில் இருந்து குரங்கணி மலைத் தொடரில் ஹெவி குண்டு என்னும் மலைப் பகுதியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கு காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட வனத் துறை பணியாளர்கள் காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

காட்டுத் தீயால் பல்வேறு அரிய வகை மூலிகைகள், மரங்கள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள அரிய வகை உயிரினங்கள் காட்டுத் தீயால் அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தீ தொடர்ந்து பரவி வருவதால் இப்பகுதியில் உள்ள மா, இலவம் மரங்கள், பாக்கு மரங்கள் போன்றவை பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கான நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை விரைவாக அணைத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com