

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் எளிதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பலருக்கும் அரசு வேலை என்பது ஒரு லட்சியமாகவே இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு வேலைக்காக தயாராகி வருகின்றனர். குறிப்பாக, TNPSC தேர்வுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பேர் தயாராகி வருகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் குரூப் வாரியாக தேர்வுகளை நடத்தி வருகிறது. டிஎன்பிஎஸ்சி மட்டுமில்லாமல் மற்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் 200 ஆர்வலர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆறு மாதம் முழுநேர பயிற்சியாக நடைபெற உள்ளது. குறிப்பாக போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் உணவும், தங்கும் வசதிகளும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் www.cecc.in என்ற போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் வாயிலாக வரும் மே 16-ம்தேதி முதல் 24-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு www.cecc.in என்ற இணைதளம் மற்றும் 04553-291269 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் அடுத்த மாதம் (ஜூன்) முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.