

காஜியபாதில் செயல்பட்டு வரும் துதேஷ்வர் வேத வித்யாபீடத்தை சேர்ந்த மாணவர் மோஹித் பாண்டே அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அயோத்தி ஸ்ரீராமர் ஆலய அர்ச்சகர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேர்களில் மோஹித் பாண்டேயும் ஒருவர். தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னதாக சிறப்பு பயிற்சி பெறுவார்கள்.
காஜியாபாதில், உள்ள பழமையான துதேஷ்வர் மட ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது துதேஷ்வர் வித்யா பீடம், வட இந்தியாவில் முக்கியமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தற்போது துதேஷ்வர் வித்யா பீடத்தில் 70 மாணவர்கள் அச்சகர்களாகவும், ஆச்சார்யர்களாகவும் பயிற்சி பெற்று வருகின்றனர். உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் உள்ள ஆலயங்களுக்கு அர்ச்சகராக சேவை செய்பவர்கள் இங்குதான் பயிற்சி பெறுகின்றனர்.
அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அர்ச்சகராகப் பணிபுரிவதற்காக 3,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் மோஹித் பாண்டே.
இது தொடர்பாக பீடாதிபதி ஸ்ரீ மஹந்த் நாராயணன் கிரி கூறுகையில், “கடவுளின் அருளால் அயோத்தி ராமருக்கு சேவை செய்ய மோஹித் பாண்டே தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வேதம் மற்றும் மதச் சடங்குகளை கற்றுள்ளனர். கடந்த 23 ஆண்டுகளாக இங்கு வரும் மாணவர்களுக்கு வேதம் கற்பிக்கப்படுகிறது.
துதேஷ்வர் வித்யா பீடத்தில் ஆச்சார்யராக இருந்து வரும் நித்யானந்தா கூறுகையில், மோஹித் பாண்டே, இங்குதான் 7 ஆண்டுகள் வேதங்கள் பயின்றார். பின்னர், திருப்பதி சென்று அங்குள்ள வெங்கடேஸ்வரர் வேத பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார். மாணவர்களுக்கு வேதம் மற்றும் மதச் சடங்குகளை கற்பித்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவதே எங்கள் நோக்கமாகும் என்றார்.
துதேஷ்வர் வித்யா பீடம் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வரும் வித்யா பீடமாகும். இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து குளித்துவிட்டு தங்கள் அன்றாட கடன்களை கழித்துவிட்டு வேதம் கற்கத் தொடங்கி விடுவார்கள். இரவு 10 மணி வரை அவர்களுக்கு தொடர்ந்து ஏதாவது வேதபாடங்கள் சொல்லித்தரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.