பள்ளத்து கருப்பசாமிக்கு 1000 கிலோ எடையில் பிரம்மாண்டமாக 2 அரிவாள்கள் காணிக்கை!
Image credit: Behindwoods

பள்ளத்து கருப்பசாமிக்கு 1000 கிலோ எடையில் பிரம்மாண்டமாக 2 அரிவாள்கள் காணிக்கை!

1 டன் எடை அதாவது 1000 கிலோகிராம் எடை கொண்ட அரிவாளைப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள் எனில் யூடியூபில் பள்ளத்து கருப்பசாமி கோயில் என்று தேடிப்பாருங்கள். அப்போது இந்தக் காணொளி தட்டுப்படலாம். நாளை 26.04.2023 புதன்கிழமை அன்று இந்தக் கோயிலில் நடைபெறவிருக்கும் திருவிழாவில் மேற்கண்ட எடை கொண்ட பிரம்மாண்டமான அரிவாள்கள் இரண்டு பள்ளத்து கருப்பசாமிக்கு காணிக்கையாக சமர்பிக்கப்படவிருக்கின்றனவாம். இந்த இரண்டு அரிவாள்களுமே தனித்தனியாக 500 கிலோ எடை கொண்டவை. உயரமும் குறைவில்லை... 21 அடி உயரம். இதை மனிதர்களால் வெறும் கை கொண்டு தூக்கி மண்ணில் நிறுத்தி விட முடியுமா? நிச்சயமாக முடியாது. அதனால், கிரேன் மூலமாகத் தூக்கி எழுப்பி கோயிலில் பள்ளத்து கருப்பசாமி முன் நிற்க வைத்திருக்கிறார்கள்.

இதை தேவகனி எண்டர்பிரைஸஸ் எனும் நிறுவனம் தன்னை அணுகிய பக்தர் ஒருவருக்காகப் பிரத்யேகமாகச் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு கருப்பசாமிக்கு இப்படியொரு பிரம்மாண்ட அரிவாளை பக்தர்கள் எவரும் காணிக்கையாகச் சமர்பித்ததில்லை. இது தான் முதல் முறை என்கிறார்கள்.

கருப்பசாமிகள் உக்கிர மூர்த்திகள். அவர்களுக்கு வேட்டைக்குச் செல்ல பைரவர் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் கையில் அரிவாள்.

அந்தவகையில் இரா.பட்டணத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு இது ஒரு தனிப்பட்ட பெருமையைச் சேர்த்திருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்.

அந்தக்காலத்தில் மன்னர்கள் பிரம்மாண்டமாகக் கோயில்கள் எழுப்பினர். இந்தக் காலத்தில் அவரவர் சக்திக்கு உகந்தவாறு வித்யாசமான வகையில் பிரமாண்டங்களைப் படைத்து வருகின்றனர். அதில் இது ஒருவகை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com