

தமிழ்நாட்டில் எப்போது சட்டசபை தேர்தல் வந்தாலும் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகையின் பேரில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பது மக்களிடையே அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக என எந்த கட்சி ஆட்சிக்கு வர விரும்பினாலும் மக்களை கவரும் வகையில் அறிவிக்கும் முதல் திட்டமாக இதுவரை நகைக்கடன் தள்ளுபடி இருந்து வருகிறது.
தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில், மக்கள் அதிக அளவில் அடகு வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குறுகிய காலத்தில் நகைக்கடன் பெறுவது அதிகரித்துள்ளது, இது வங்கிகளின் நகைக்கடன் பரிவர்த்தனைகளை உயர்த்தியுள்ளது.
அதன்படி கடந்த 2021-ல் தேர்தலில் வெற்றி பெற்று திமுக அரசு பொறுப்பேற்றவுடன், 5சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்ததுடன் சுமார் 14.50 லட்சம் பேருக்கு ரூ.6,000 கோடி தங்க நகைக்கடனை தள்ளுபடியும் செய்தது.
அதில் தகுதியற்றவர்களாக நீக்கப்பட்ட சுமார் 35 லட்சம் பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
தள்ளுபடி செய்யப்பட்ட நகைக்கான ரூ.6,000 கோடி பணத்தை கூட்டுறவு வங்கிகளுக்கு தவணை முறையில் தமிழக அரசு செலுத்தி வந்த நிலையில் வட்டி நிலுவை மட்டுமே சுமார் ₹400 கோடிக்கும் மேல் இருந்தது. எனவே இனிமேல் எந்த அரசு அமைந்தாலும் தங்க நகைக்கடன் தள்ளுபடிக்கு சாத்தியமேல்லை. அதற்கான காரணத்தை பார்க்கலாம் வாங்க...
பொதுவாக கூட்டுறவு வங்கிகள் லாப நோக்கமற்றவை என்றாலும், கடந்த முறை தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை வங்கிகளுக்கு முழுமையாகக் கொடுக்கவே அரசு பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டதால் வங்கிகளின் சுழற்சி நிதி கடுமையாக பாதிக்கப்பட்டது. 2026-ம் ஆண்டு நிலவரப்படி, பல கூட்டுறவு சங்கங்கள் டெபாசிட் செய்தவர்களுக்கு வட்டி கொடுக்கக் கூடத் திணறி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழக கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள மொத்த நகைக்கடன்களின் மதிப்பு (5 சவரனுக்குக் கீழ்) சுமார் ரூ.20,000 கோடி முதல் ரூ.25000 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் சுமை அதிகரித்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை எந்த அரசாலும் தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு ஈடு கட்ட முடியாது.
ஒருவேளை ரூ.25000 கோடியை அரசு தள்ளுபடி செய்தால், கூட்டுறவு வங்கிகளின் மொத்த மூலதனமே இதில் முடங்கிவிடும்.
அரசு உடனடியாக இந்த ரூ.25,000 கோடியை வங்கிகளுக்குத் தரவில்லை என்றால், அந்த வங்கிகள் அடுத்த நாளே திவாலாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் தற்போது தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் அதன் மதிப்பும் அதிகமாகிவிட்டதால, தங்கத்தின் பேரில் கடன் வழங்கும் தொகையும் அதிகமாகி விட்டது. இன்றைய நிலவரப்படி ஒரு நபருக்கு சராசரியாக ஐந்து சவரன் என்றால் 2.5 லட்சம் வரை கடன் வாங்கியிருப்பார்கள்.
2021-க்கு முன்பு வரை கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் வெவ்வேறு சங்கங்களிலும் கடன் பெற்று தள்ளுபடி பெற்றனர். கடந்த முறை 5 சவரன் தள்ளுபடியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் கடன் வாங்கியது தெரியவந்ததால், சுமார் 25 லட்சம் பேர் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.
வரும் தேர்தலை நம்பி நிறைய மக்கள் நகைக்கடன் தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைகளை அடமானம் வைத்து அதிகளவு கடன் வாங்கியவர்களுக்கு இந்த செய்தி பேரடியாக இருந்தாலும் இதுதான் யதார்த்தமான உண்மை.
அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொள்ளும்போது, இவ்வளவு பெரிய தொகையைத் தள்ளுபடி செய்வது கூட்டுறவுத் துறையையே முடக்கிவிடும்.
இனிவரும் காலங்களில் நகைக்கடன் தள்ளுபடி என்பது சாத்தியமற்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.