பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத் ரத்னா... மத்திய அரசு அறிவிப்பு!

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத் ரத்னா... மத்திய அரசு அறிவிப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் ஸ்தாபர்களில் ஒருவருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

1927 ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்கு வந்தது.  இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.-ல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி, நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி பாஜகவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். 1980ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து, பாஜகவை தோற்றுவித்த தலைவர்களுள் எல்.கே.அத்வானி முக்கியமானவர்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டின் ஏழாவது துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990ல் அத்வானி நடத்திய "ரத யாத்திரை" தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்பு முனையாக அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், நாம் வாழும் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவர் அத்வானி என புகழாரம் சூட்டியுள்ளார்.அடிமட்ட தொண்டனில் தொடங்கி நமது நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். உள்துறை அமைச்சராகவும், தகவல் தொடர்பு துறை அமைச்சராகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் முன்னுதாரணமாக இருந்துள்ளன.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கு இணையற்ற முயற்சிகளை மேற்கொண்டவர் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட இந்த தருணம் எனக்கு மிகவும் உணர்ச்சி மிகுந்தது. அவருடன் பழகுவதற்கும், அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும் எண்ணற்ற வாய்ப்புகள் கிடைத்ததை நான் எப்போதும் எனது பாக்கியமாகக் கருதுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com