ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
Updated on

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தனது மனைவியுடன் பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்தார். விருதுநகரில் இன்று நடைபெற உள்ள இரண்டு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ராஜபாளையம் வந்தார். அதைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரங்கமன்னார் கோயிலுக்கு அவர் தனது மனைவியுடன் வருகை தந்தார். அவருக்குக் கோயிலில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கோயிலின் கொடி மரத்தைத் தொட்டு கும்பிட்ட பிறகு உள்ளே சென்ற ஆளுநர், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியாரையும்
ஸ்ரீ ரங்கமன்னாரையும் தரிசனம் செய்து வணங்கினார். அதன் பிறகு ஆளுநருக்குக் கோயில் பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது. ஸ்வாமி தரிசனம் முடித்து விட்டு கோயிலுக்கு வெளியே வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கோயில் யானை ஜெயமால்யதாவுக்கு உணவு வழங்கினார்.

முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கு வருகை தந்த ஆளுநரை மணவாள மாமுனிகள் ஜீயர் ஸ்ரீ சடகோபராமானுஜர் வரவேற்றார். ஆண்டாள் கோயிலில் தரிசனம் முடித்த ஆளுநர், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற இருந்த பழைய மாணவர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் சென்றார். அதனைத் தொடர்ந்து சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற இருக்கும் விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com