ஆளுநர் வெளிநடப்பு - சபாநாயகர் அப்பாவு வேதனை!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு
Updated on

நேற்று சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அதில் 2023 சட்டமன்ற கூட்டத் தொடருக்கான ஆளுநர் உரை, முன்னரே தயார் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதாக தெரிவித்தார்.

ஒப்புதல் வந்த உரையை முழுவதுமாக படிக்காமல் ஆளுநர் சில விஷயங்களை தவிர்த்திருக்கிறார். மாநில சட்டமன்றங்களில் உரையாற்றும் உரையை இந்திய அரசியலைமைப்புச் சட்டம்தான் தந்திருக்கிறது. அத்தகைய அங்கீகாரத்தை தந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரையே ஆளுநர் உச்சரிக்காமல் தவிர்த்திருப்பது வேதனையளிப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

'திராவிட மாடல் என்பதை ஆளுநரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆளுநரை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், வேதனையோடு இதை சொல்கிறேன். இந்திய அரசியலமைப்பின் படி நமது மாநிலத்திற்கு தலைவர் அவர்தான். அவர் நமக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 159-ன் அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டவருக்கு, அதை பாதுகாக்க வேண்டிய முழுக்கடமையும் இருக்கிறது. ஆளுநர் செய்வது நியாயமா என்று பத்திரிக்கையாளர்கள்தான் கேட்க வேண்டும்'

'தேசியகீதம் இசைக்கப்பட்ட பின்னர் ஆளுநர் கிளம்பிச் சென்றிருக்கலாம், தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக பதில் அளிப்பதில்லை, ஏன் இப்படி நடக்கிறது என தெரியவில்லை. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இருக்கும் ஆளுநர்கள் எதற்காக இதுபோன்று நடந்துகொள்கிறார்கள் என தெரியவில்லை' என்றார்.

logo
Kalki Online
kalkionline.com