ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து நள்ளிரவு (ஞாயிற்றுக்கிழமை)12.07 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான கவுண்டன் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. வணிகப்பயன்பாட்டுக்காக இந்த ராக்கெட் செயல்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. எம்-3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. அதனை வடிவமைக்கும் பணிகளும், செயற்கைகோள்களை நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.மேலும் இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்திய நிறுவனம் மற்றும் பிரிட்டனின் ஒன் வெப் நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலைத் தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்ப உள்ளது. இந்தியாவின் பார்தி தொலை தொடர்பு சேவை நிறுவனமானது ஒன் வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும் முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.