மத்திய அரசின் 60% சதவீத நிதியைப் பெற்று நடத்தப்பட்டு வரும் கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி திட்டம், தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கமளித்திருக்கிறார்.
2017ல் மத்திய அரசின் 'மாத்ரு வந்தனா' திட்டம் அறிமுகமானது. கர்ப்பிணிகள் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டத்தில் பேறு கால நிதியாகவும், ஊட்டச்சத்து மருந்துகளும் தரப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 35 ஆண்டுகளுக்கு முன்னரே கர்ப்பிணிகளுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இரண்டு திட்டங்களையும் இணைத்து கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக ரூ.14 ஆயிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன.
மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு இணையம் மூலம் பதிவேற்றம் செய்வதில் உள்ள குறைபாடுகள் காரணமாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விரிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மென்பொருளில் தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. இத்திட்டம் தமிழ்நாடு அரசால் நிறுத்தி வைக்கப்படவில்லை. காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விண்ணப்பித்துள்ளவர்கள் மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். கர்ப்பிணிகளுக்கான நிதியுதவி வருவதற்கு இன்னும் காலதாமதமாகும். குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை காட்டி பின்னாளில் நிதியுதவி பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.