இமாச்சலத்தில் மழை, வெள்ளத்துக்கு 30 பேர் பலி, ரூ.3,000 கோடிக்கு சேதம்!

சுற்றுலாப் பயணிகள் 500 பேர் சிக்கித் தவிப்பு
இமாச்சலத்தில் மழை, வெள்ளத்துக்கு 30 பேர் பலி, ரூ.3,000 கோடிக்கு சேதம்!

மாச்சல மாநிலத்தில் தொடர் மழைக்கு இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ரூ. 3000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. சிம்லாவில் மட்டும் அதிகபட்சமாக 11 பேர் மழைக்கு பலியானதாகவும், இறந்த 30 பேரில் 29 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சந்தர்தால், பாகல் நல்லா மற்றும் லாஹல், ஸ்பிடி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் 500-க்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உனா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 515 தொழிலாளர்களை தேசிய மீட்புப் படையினர் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை, வெள்ளத்தால் பல இடங்களில் மின்சாரம், குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் மீண்டும் மின்சாரம், குடிநீர் விநியோகம் செய்ய மாநில நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுலாவந்த பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது. மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்தார்.

முன்னதாக மாநில பேரிடர் மீட்பு நிர்வாக குழுவினருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சுக்கு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவை மழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

இதுவரை 20-க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் சாலை விபத்துகளில்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நிலச்சரி மற்றும் வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மாநிலத்தில் 1300-க்கும் மேலான சாலைகள் மழையால் பாதிப்படைந்துள்ளன என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஜெகத்சிங் நேகி தெரிவித்தார்.

மாநிலத்தில் மழை, வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் விடியோவா வெளியிடப்பட்டது. குல்லுவில் கார், லாரி போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மணாலி அருகே பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மண்டி மாவட்டம், துனாங் நகரத்தில் வெள்ளநீர் வீடுகளில் புகுந்தது. மணாலியில் மூன்று மாடி ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்தது.

பியாஸ் மற்றும் துணை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை அடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவிலும் பலத்த மழை, வெள்ளம் பெரும் சேத்த்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சலம் மற்றும் உத்தரகண்ட் மாநில முதல்வர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி மழை, வெள்ள பாதிப்பை கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com