அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கையில் வரலாற்று சாதனை!

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கையில் வரலாற்று சாதனை!

மாணவர்கள் தொழிற்கல்வி பெற்று அதன் மூலம் வாழ்வில் சிறக்க உருவாக்கப்பட்டதுதான் அரசு தொழிற்பயிற்சி மையங்கள். அந்த வகையில், 2023ம் ஆண்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 23.09.2023 அன்றைய நிலவரப்படி 93.30 சதவீதத்தை எட்டியுள்ளது. 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 25.09.2023 முதல் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், சர்வேயர், கம்மியர் மோட்டார் வண்டி, வயர்மேன், வெல்டர் போன்ற 57 பொறியியல் தொழிற்பிரிவுகளிலும் ஃபுட் ப்ரொடக்ஷன், ஆடை வடிவமைத்தல் தொழிற்நுட்பம், போன்ற 22 பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகத் தரத்திலான தொழில்நுட்ப பயிற்சியினை மாணவர்கள் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து 2,877 கோடி ரூபாய் செலவில் புதிய தொழில் நுட்பங்களுடன்கூடிய 40 தொழில் நுட்ப மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் திறந்து வைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு முதல் இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னீஷியன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் ஆட்டோமேஷன், மெக்கானிக் மின்சார வாகனங்கள், அட்வான்ஸ்டு சி.என்.சி மெஷினிங், பேசிக் டிசைனர் விர்ச்சுவல் வெரிஃபையர் போன்ற நவீன தொழிற்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டணமில்லா பயிற்சியை வழங்குவதுடன் அவர்களுக்கு சீருடைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், சைக்கிள், மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, விடுதி வசதி போன்றவையும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் இணைந்த மேலாண்மைக் குழுவின் ஒத்துழைப்புடன் பயிற்சியின்போதே முன்னணி தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொழிற்தேர்வில் 93.07 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் செய்முறை பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன் மாணவர்களை முன்னணி தொழில் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்காக அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பணியமர்வு பிரிவு உருவாக்கப்பட்டு இந்த ஆண்டு 80 சதவிகித மாணவர்கள் வளாக நேர்காணல்கள் மூலம் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். மேலும், முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அந்த நிறுவனங்களில் மாணவர்களுக்கு நேரடி செய்முறை பயிற்சி மற்றும் இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர தற்போது மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com