

புனித ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது.இதனைத் தொடர்ந்து,இன்று முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்க உள்ளனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் புனிதமாக கருதப்படுகிறது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு சஹர் உணவை உட்கொண்டு, சூர்ய அஸ்தமனம் வரை உணவு மற்றும் நீர் அருந்தாமல் நோன்பு மேற்கொள்வார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை நேற்று தென்பட்டது. இன்று (பிப்ரவரி 19) முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் நோன்பு மற்றும் பண்டிகையை பிறை பார்த்து பின்பற்றப்படுகிறது. இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து முடிவில் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அவ்வகையில் நேற்று மாலை (புதன்கிழமை 18ஆம் தேதி) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது.
நேற்று முன்தினம் ரமலான் நோன்பிற்கான பிறை சவுதி அரேபியாவில் தெரிந்தது. இதையடுத்து நேற்று தமிழ்நாட்டிலும் பிறை தெரிய வாய்ப்புள்ளதாக கூறிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் ரமலான் மாதத்திற்கான பிறை நேற்று மாலையில் தமிழ்நாட்டினுடைய பல்வேறு இடங்களில் தெரிந்தது. ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் புதன்கிழமை 18ம் தேதி மாலை பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் புனித ரமலான் மாதத்தினுடைய முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பள்ளிவாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளும், அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதம் முழுவதும் மக்கள் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாவின் அருளைப் பெற வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களது கனிவான ரமலான் முபாரக் நல்வாழ்த்துக்கள் என்று தலைமை காஜி முஃப்தி என் பி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.
ரமலான் மாதம் வழக்கமாக 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். அதன்படி மார்ச் 18 அல்லது 19 அன்று ரமலான் முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.