

இயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கி தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தும். அப்படி ஒரு நிகழ்வாக ஈரானின் ஹார்மூஸ் தீவு உலகத்தின் கவனத்தை பெற்று வருகிறது.
ஈரானின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ள ஹார்மூஸ் தீவு 'வானவில் தீவு' என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள இயற்கை சூழலைக் காண வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் வறண்ட நாடு என்பது அறிவோம். மே முதல் அக்டோபர் வரை அதீத வெயிலும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை அவ்வப்போது பெய்யும் மழையும் இங்குள்ள தட்பவெப்பநிலை.
ஈரானில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஷார்மூஸ் தீவிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடல் நீர் மற்றும் கடற்கரை ஆகியவை திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது என்றும் இந்தக் காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
கடல்நீர் சிவப்பாக மாறியதன் பின்னணி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. கடல் தண்ணீர் மற்றும் கடற்கரை எப்படி ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது ? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி பலரும் தேடி வருகின்றனர்.
பொதுவாக கடல் நீர் சிவப்பு நிறமாக மாறுவதன் காரணமாக கடலில் சில வகை நுண்ணுயிர்கள் (Algae / Dinoflagellates) குறிப்பாக Karenia brevis, Noctiluca scintillans போன்றவை திடீரென அதிகமாக வளர்கின்றன என்றும் இவை சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமுள்ள பிக்மெண்ட் ( நிறம் தரும் பொருள்) கொண்டதால் கடல்நீர் ரத்த சிவப்பாகத் தெரியும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவருகிறது. நம் நாட்டிலும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர கடற்கரைகளில் சில நேரங்களில் காணப்படும் சிவப்பு கடல்நீர் பெரும்பாலும் Red Tide காரணமாகவே ஏற்படுகிறது என்கின்றனர்.
மேலும் சில பாக்டீரியா / பிளாங்க்டன் போன்ற நுண்ணுயிர்களின் மிகை வளர்ச்சி (Plankton Bloom) ,தொழிற்சாலை கழிவுகள் ,சாயன நிறங்கள், கழிவு நீர் கடலில் கலக்கும் மாசுபாடு (Industrial / Sewage Pollution) ,இயற்கை கனிமங்கள் (Iron Oxide) என சொல்லப்படும் கடலடியில் இருந்து வெளியேறும் இரும்புச் சேர்மங்கள் நீரில் கலக்கும் நிலை, மற்றும் ஒரே நேரத்தில் அதிக அளவில் உயிரினங்கள் இறப்பது போன்ற கடலில் ஏற்படும் அரிய நிகழ்வுகள் ஆகிய காரணங்களாலும் கடல்நீர் நிறம் மாறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஹார்முஸ் தீவில் ரத்த சிவப்பு நீர் பெய்த மழையினால் அல்ல என்று கூறப்படுகிறது. அரேபியா வளைகுடாவின் ஹர்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள இத்தீவில் தனித்துவமான 'கோலக்' என அழைக்கப்படுமா செம்மண் நிறைந்து உள்ளதாகவும் இந்த செம்மண்ணில் அதிகம் உள்ள அயர்ன் ஆக்சைடு மற்றும் பிற கனிமங்கள் இரும்பு சத்து மழை நீருடன் கலக்கும்போது ரத்த சிவப்பு நிறத்துடன் மாறுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த தீவில் உள்ள கடல் இப்படி ரத்த சிவப்பு நிறத்தில் மாறுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் பலமுறை இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தீவின் நிலப்பரப்பில் ரத்த சிவப்பு நிற கடல் மட்டுமின்றி மஞ்சள், ஆரஞ்சு உள்பட பிற வண்ண பாறைகள் உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய சிறப்பு.