மணலி எண்ணெய் குடோன் தீ விபத்து..! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்!

Fire accident near manali
Fire accident near manali
Updated on

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூர் பகுதியில் உள்ள எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்த எண்ணெய் பீப்பாய்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. தீ பரவியதைத் தொடர்ந்து ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலையிலிருந்து வெளியேறினர்.

குடோனில் பாய்லர்கள் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் எண்ணெய் குடோனுக்கு அருகே தீயணைப்புத்துறை வீரர்கள் செல்ல முடியவில்லை. தீ விபத்தின் பொழுது குடோனில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

விச்சூரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் தான் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ பற்றியது. குடோனில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பீப்பாய்கள் மற்றும் ரசாயன பொருட்கள் காரணமாக தீ மளமளவெனப் பரவி கரும்புகை சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாகப் போராடி தீயை அணைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் மே 15 அன்று சென்னை சோழிங்கநல்லூர் காரப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தின் கிடங்குப் பகுதியில் (டெக் மஹிந்திரா கிடங்கு) மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com