திருச்சியில் பணி புரியும் மகளிருக்கான விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்து இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவில் பணிக்கு செல்லக்கூடிய பெண்களின் பங்கு தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழ்நாடு பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் பெண்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புற பகுதிகளில் குடியேறி பணியாற்றக்கூடிய பெண்கள் அதிகரித்துள்ளனர். அவர்கள் பணிபுரியும் இடங்களில் தங்குவதற்கு போதிய இட வசதி இல்லாமலும், பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் முக்கிய நகர்புற பகுதிகளில் பணிபுரியும் மகளிருக்கான விடுதியினை அமைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக திருச்சி கண்டோன்மென்ட் ஹெப்பர் சாலையில் அமைந்துள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதியினை சென்னையில் இருந்தவாறு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த விடுதியில் 2 நபர்கள் முதல் 4 நபர்கள் வரை தங்கக்கூடிய 106 அறைகள் உள்ளன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பு வசதி, இலவச வைஃபை, பொழுதுபோக்கு அம்சங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விடுதியில் வருடம் அல்லது மாதம் அல்லது நாட்களுக்கு கூட தங்கி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு ww.tnwhc.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.