ரத்த தானம் செய்ய விரைந்த மனிதம் மாறாத தன்னார்வலர்கள்!

ரத்த தானம் செய்ய விரைந்த மனிதம் மாறாத தன்னார்வலர்கள்!
Updated on

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து நேற்று மாலை சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் சரக்கு ரயில் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் பன்னிரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. அதே நேரத்தில் மற்றொரு வழித் தடத்தில் வந்துகொண்டிருந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம் புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் சுமார் 280 பேர்களுக்கு மேல் உயிரிழந்து இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 900க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். பாலாசோரில் நேற்று இரவுக்குள் மட்டும் 3000 யூனிட் ரத்தம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா கூறுகையில், ‘உன்னத நோக்கம் ஒன்றுக்காக ரத்த தானம் செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார். மனிதர்களுக்குள் எவ்வளவுதான் பேதங்கள், போட்டி, பொறாமைகள் இருந்தாலும் இதுபோன்ற தன்னலமற்ற செயல்களைப் பார்க்கும்போது மனிதம் இன்னும் வாழ்ந்து உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

logo
Kalki Online
kalkionline.com