ஹைதராபாதைச் சேர்ந்த நாகபூஷண் என்பவர் அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு 1,265 கிலோ எடையுள்ள லட்டு தயாரித்து பிரசாத காணிக்கையாக அனுப்பிவைத்துள்ளார். முற்றிலும் குளிர்பதனம் செய்யப்பட்ட் கண்ணாடிப் பெட்டியில் வைத்து பாதுகாப்பாக இந்த லட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 30 பேர் தொடர்ந்து 24 மணி நேரம் உழைத்து இந்த லட்டுவை தயாரித்துள்ளனர்.
2000-ம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீஸ் என்ற பெயரில் கேட்டரி தொழில் செய்து வருகிறேன். அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு என்ன பிரசாதம் காணிக்கையாக கொடுக்கலாம் என்று யோசித்த போது பூமி பூஜை நாள் முதல் அயோத்தி கோயில் திறப்புவிழா வரை ஒவ்வொரு நாளும் ஒரு கிலோ லட்டு கொடுக்கலாம் என்று தீர்மானித்தோம்.
அந்த கணக்கின்படி அயோத்தி கோயிலுக்காக மொத்தம் 1,256 கிலோ எடையுள்ள லட்டு தயாரித்துள்ளோம். இந்த லட்டு ஹதராபாதிலிருந்து யாத்திரையாக எடுத்துச் செல்லப்படுகிறது என்றார் நாகபூஷண் ரெட்டி. இந்த லட்டு தயாரித்த ஸ்வீட் மாஸ்டர் துஷாசன் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இவ்வளவு பெரிய லட்டு செய்வது இதுவே முதல் முறையாகும். பயணத்தின்போது சேதமடையாமல் இருக்கும் வகையில் இந்த லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதனிடையே அயோத்தியில் ஒருவாரம் நீடிக்கும் சிலை நிர்மாண (பிராண பிரதிஷ்டை) விழாவின் இரண்டாவது நாளான புதன்கிழமை ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் வளாகத்தில் ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) சிலை கிரிவலமாக எடுத்துச் செல்லப்பட்டதாக வேதவிற்பன்னர் ஆச்சார்ய கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் தெரிவித்தார். ஜலயாத்திரை, தீர்த்த பூஜை, சுவாசினி பூஜை, வர்தினி பூஜை, கலசயாத்திரை நடைபெற்றதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் 22 ஆம் தேதி கும்பாபிஷேக விழா, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், ராமஜென்மபூமி அறக்கட்டளையினர், முக்கியப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
அயோத்தி ஸ்ரீராமர் கோயில், பொது மக்கள் தரிசனத்துக்காக ஜனவரி 23 இல் திறக்கப்படும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் பொதுச் செயலர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.