பெரிய வீடு வாங்க வேண்டும் என்கிற எண்ணம் பெரும்பாலான இந்தியர்களின் மனதில் எழுந்திருப்பதாக சமீபத்திய ரியல் எஸ்டேட் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்பைப் போல் பெரு நகரங்களில் 500 அல்லது 600 சதுர மீட்டர் கொண்ட சிங்கிள் பெட்ரூம் பிளாட் வீட்டை யாரும் விரும்புவதில்லை என்கிறார்கள், ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.
பிஸினெஸ் ஸ்டேண்டர்டு பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பெரும்பாலான பில்டர்கள் பெரிய அளவிலான பிளாட் கொண்ட மல்டி பிளக்ஸ் அபார்ட்மெண்ட்டை உருவாக்குவதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நடப்பாண்டில் சராசரி பிளாட் சைஸ் அளவு குறைந்தபட்சம் 5 சதவீதம் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது வாடிக்கையாளர்களின் விருப்பம் சற்றே பெரிய பிளாட் சைஸை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான 7 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைந்தபட்சம் ஆயிரம் சதுர அடி உள்ள வீட்டையே பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குவது தெரிய வந்துள்ளது.
நடப்பாண்டில் சராசரி பிளாட் அளவு 1225 அடி இருக்குமாறு ரியல் எஸ்டேட் பில்டர்களின் தங்களது பிராஜெக்டுகளை இறுதி செய்து கட்டிட வேலையை ஆரம்பித்துள்ளார்கள். கடந்த ஆண்டில் இதுவே 1170 சதர அடியாக இருந்திருக்கிறது. ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கொண்ட பிளாட் என்றால் குறைந்தபட்சம் இரண்டு படுக்கையறை வசதி, இரண்டு டாய்லெட், ஒரு பாலகணி கொண்ட இடங்களாகவே இருக்கவேண்டும். முன்பு போல் சிங்கிள் பெட்ரூம், சிங்கிள் டாய்லெட் கொண்ட பிளாட்டை தற்போது யாரும் விரும்புவதில்லை.
கொல்கத்தா, ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் உள்ள பிளாட்டையே வாங்க விரும்புகிறார்கள். கொல்கத்தாவில் குறைந்தபட்சம் 1150 சதுர அடியும், ஹைதராபாத்தில் குறைந்தபட்சம் 2200 சதுர அடி கொண்ட பிளாட், பெரும்பாலான வாடிக்கையாளர்களின் தேடலாக இருந்திருக்கிறது.
ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா வாசிகளின் ரசனையும் தேர்விலும் நிறைய மாற்றங்கள் இருந்தாலும், சென்னை மற்றும் மும்பை வாசிகளின் ரசனையில் பெரிய மாற்றங்கள் இல்லை. சென்னையைப் பொறுத்தவரை ஒரு பிளாட்டின் சராசரி அளவி 1175 சதர அடியாக இருக்கிறது. இதுவே மும்பையில் சராசரியாக 743 சதுர அடியாக இருக்கிறது.
மும்பையைப் பொறுத்தவரை 743 சதுர அடியில் சிங்கிள் பெட்ரூம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு டாய்லெட் இருக்க வாய்ப்ப்புண்டு. ஆகவே, சிங்கள் பெட்ரூம் தேவை மும்பையில் தொடர்ந்து இருந்து வருகிறது. சென்னையிலும் பல இடங்களில் சிங்கிள் ரூம் பிளாட் வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற நகரத்து வாசிகளோடு ஒப்பிடும்போது, மும்பை வாசிகளும், சென்னை வாசிகளும் இடங்களை சிக்கனமாக பயன்படுத்தவே நினைக்கிறார்கள்.
தகவல் தொழில்நட்பம் மேம்பட்டிருக்கும் நிலையில், எங்கிருந்து வேண்டுமென்றாலும் பணி செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருப்பதால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நல்ல வசதியான பிளாட்டையே விரும்புகிறார்கள். நகரத்தின் பரபரப்பு, போக்குவரத்து நெருக்கடிகளை விட்டு தொலைவில் இருக்கவே மக்கள் விரும்புகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இதே டிரெண்ட் தொடர்ந்து வருவதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதற்கேற்ப பிளாட்களின் அளவை அதிகரித்து வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் சிங்கிள் பெட்ரூம் கொண்ட பிளாட் அரிதாகிவிடும். பெரிய சைஸ் பிளாட் என்பதால் பிளாட் பட்ஜெட்டும் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புண்டு. ஆகவே, இனி பிளாட் வாங்குவது என்பது காஸ்ட்லியான விஷயமாகவே தொடர்ந்து இருக்கப்போகிறது.