திருக்கோயில் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் ஊக்கத்தொகை உயர்வு!

திருக்கோயில் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் ஊக்கத்தொகை உயர்வு!
Updated on

திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் முழு நேர மற்றும் பகுதி நேர மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத்தொகை கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டு இருக்கும் அரசாணை குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த அரசாணையில், ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர் வேத ஆகமப் பாடசாலைகள் என 15 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு 3000 ரூபாய் மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஜூன் 2023 முதல் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் முழு நேரப் பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை 3000 ரூபாயிலிருந்து, 4000 ரூபாயாகவும், பகுதி நேரப் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க இன்று அரசாணை பிறக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com