போக்குவரத்து விதிமீறலுக்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகை! சென்னையில் 3 கோடி வசூல்!

போக்குவரத்து  விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்

வாகன பெருக்கத்தால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு பன்மடங்கு உயர்த்தியதால் சென்னையில் அக்டோபர் 21-ம் தேதி முதல் புதிய அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுதும், போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கட்டுப்படுத்த, மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை பன் மடங்கு உயர்த்தி , 2019ல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த புதிய அபராத தொகையை, பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தின. தமிழக அரசும், இது தொடர்பான அரசாணையை வெளியிட்டது. அதன்படி, சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, உயர்த்தப்பட்ட அபராத தொகை அமலுக்கு வந்தது.

Traffic
Traffic

இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை உயர்த்தப்பட்ட பிறகு போக்குவரத்து விதிமீறல் குறித்த வழக்குகள் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனை தவிர சென்னையில் கூடுதலாக 3 கோடி ரூபாய் அபராதம் வசூலாகியுள்ளது.

புதிய அபராத தொகை நடைமுறைப்படுத்தப்பட்ட இரண்டு மாதத்தில் 1 லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

புதிய அபராத தொகை நடைமுறைக்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 கோடியே 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில்புதிய அபராத தொகை நடைமுறைக்கு வந்த பிறகு ஒரு மாதத்திற்கு 97 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8 கோடியே 73 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய அபராதத் தொகை விதிக்கப்பட்ட இரண்டு மாதத்தில் 60 சதவீதம் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பழைய அபராத தொகை வசூலிக்கப்பட்ட போது ஹெல்மெட் அணியாததாக மாதந்தோறும் சராசரியாக 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலுக்கு பிறகு இந்த வழக்குகள் எண்ணிக்கை பாதிக்கு கீழ் குறைந்துள்ளது.

இதேபோன்று அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிக்னலை மீறி வாகனத்தை இயக்குதல், சீட் பெல்ட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஆகிய வீதிமீறல்கள் தொடர்பான வழக்குகள் எண்ணிக்கையும் மூன்று மடங்குகள் வரை குறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com