
இந்தியாவிற்கான பாஸ்போர்ட் புகைப்பட விதிகள் இன்று முதல் மாறுகின்றன. புதிதாகப் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் அல்லது புதுப்பிப்பவர்கள் இந்த புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
புதிய பாஸ்போர்ட் விதிகள் இன்று முதல் அமல்! வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை!
இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்களா அல்லது புதுப்பிக்கப் போகிறீர்களா? அப்படியானால், புதிய புகைப்பட விதிகளுக்குத் தயாராக இருங்கள்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, இந்திய அரசு பாஸ்போர்ட் புகைப்பட விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இன்று (செப்டம்பர் 1) முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் உட்பட அனைவரும் இந்த புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், ICAO விதிகளுக்கு உட்பட்ட புகைப்படங்களை மட்டுமே ஏற்கும் என்று அறிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள், இந்திய வெளியுறவுத் துறையின் உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் புதிய புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
ICAO பயோமெட்ரிக் அம்சங்களுக்குப் பொருந்தும் புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள், அச்சிடப்பட்ட புகைப்படங்களுக்குப் பதிலாக, சர்வதேச அளவில் பொருந்தக்கூடிய, உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஜிட்டல் படங்களை வலியுறுத்துகின்றன.
விண்ணப்பதாரர்கள் தாமதங்களைத் தவிர்க்க, இந்த புதிய விதிமுறைகளை மிகக் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய விதிகள் என்னென்ன?
புகைப்படத்தின் வடிவம்: புகைப்படத்தை பிரிண்ட் செய்து கொடுக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக டிஜிட்டல் வடிவத்தில், அதாவது கம்ப்யூட்டரில் அப்லோடு செய்ய வேண்டும்.
புகைப்படத்தின் அளவு: டிஜிட்டல் புகைப்படத்தின் அளவு 630 x 810 பிக்சல்கள் இருக்க வேண்டும்.
பின்னணி: பின்னணி வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.
முகத்தின் நிலை: முகம் நேராக இருக்க வேண்டும். தலையின் அளவு 80-85% வரை படத்தில் இருக்க வேண்டும். முகம் தெளிவாகத் தெரிய வேண்டும்.
முக பாவனை: முகம் இயல்பாக இருக்க வேண்டும். கண்கள் திறந்திருக்க வேண்டும். வாய் மூடியிருக்க வேண்டும்.
படத்தில் தெளிவு: புகைப்படத்தில் நிழல்கள், வெளிச்சம், அல்லது சிவப்பு கண்கள் (RED EYE) இருக்கக் கூடாது. எந்த டிஜிட்டல் திருத்தங்களும் இருக்கக் கூடாது.
கண்களும் காதுகளும்: தலைமுடி, கண்ணாடி அல்லது வேறு எதுவும் கண்களை மறைக்கக் கூடாது. காதுகளும் தெளிவாகத் தெரிய வேண்டும்.
ஆடைகள்: அடர் நிற ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுக்க வேண்டும்.
எவற்றைச் செய்யக் கூடாது?
பழைய, கருப்பு-வெள்ளை புகைப்படங்களைச் சமர்ப்பிக்கக் கூடாது.
செல்ஃபி அல்லது ஃபோட்டோ எடிட் செய்யப்பட்ட படங்களைச் சமர்ப்பிக்கக் கூடாது.
தொப்பி, முகமுடி போன்ற தலைக்கவசங்களை அணியக் கூடாது. ஆனால், மருத்துவ அல்லது மத காரணங்களுக்காக மட்டுமே தலைக்கவசம் அணியலாம். அப்போது முகம் முழுவதுமாகத் தெரிய வேண்டும்.
வீட்டில் பிரின்ட் செய்த புகைப்படங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படும். அதனால், ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்வது நல்லது.
இந்த புதிய விதிகள் பாஸ்போர்ட் விண்ணப்பப் பரிசீலனையை விரைவுபடுத்தவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும்.