மியான்மர் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேர் இன்று விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது;
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கென்று பல்வேறு ஏஜென்டுகள் மூலம் தமிழர்கள் பலர் மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, கொத்தடிமைகளாக பயன்படுத்தப் பட்டனர்.
அப்படி அந்நாட்டில் சிக்கி தவித்த தமிழர்கள் பற்றி முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரிய வந்தததும் அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார்.
இதையடுத்து மியான்மரில் சிக்கித் தவித்த 14 தமிழர்களில் 13 பேர் தற்போது விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப் பட்டுள்ளனர். இங்கிருந்து அவர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இன்னும் முயான்மரில் சுமார் 50 தமிழர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அவர்களையும் விரைவில் மீட்கும் நடவடிக்கை எடுக்கப் படும். வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் தமிழக அரசில் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.
-இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.