வடக்கு சிக்கிமில் சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலி: ஜனாதிபதி மற்றும் பிரதமர் இரங்கல்!

வடக்கு சிக்கிமில் சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலி: ஜனாதிபதி மற்றும் பிரதமர் இரங்கல்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

வடக்கு சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு சிக்கிமின் ஜெமா பகுதியில் ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் நேற்று பிற்பகல் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 4 வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததால் விபத்துஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிக்கிம் மாநிலம் வடக்கில் இந்தியா-சீனா எல்லைக்கு அருகே ஜெமா என்ற இடத்தில் இருந்து ராணுவ வீரர்கள் 3 வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஒன்று ஒரு கொண்டை ஊசி வளைவு போன்ற சாலை திருப்பத்தில் கடந்த போது சாலையை விட்டு விலகி செங்குத்தான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது.

ராணுவ வீரர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சாலை விபத்தில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளது எனது மனதில் ஆழ்ந்த வலியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சேவைக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும் நாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 3 ராணுவ உயர் அதிகாரிகள் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் வடக்கு வங்காளத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சிக்கிம் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com