மீண்டும் ஒரு 'அத்திப்பட்டி'......!

மீண்டும் ஒரு 'அத்திப்பட்டி'......!

இமயமலை அடிவாரத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில், 'ஜோஷிமத்' என்ற அழகிய நகரம், மண்ணில் மூழ்கிக் கொண்டிருக்கிருக்கும் ஆபத்தில் இருக்கிறது. அதே போன்று,'அஜீத்' நடிப்பில் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிய, 'சிட்டிசன்', திரைப்படத்தில் 'அத்திப்பட்டி' எனும் கடலோர கிராமே கடலில் மூழ்கி போவதாக ஒரு சம்பவத்தைக் காட்டுவார்கள்

அந்த ஜோஷிமத் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 500 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அந்த ஊர் மெல்ல, மெல்ல மண்ணில் புதைந்து வருவதாக, அந்த ஊர் மக்கள் அபயக்குரல் எழுப்புகிறார்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில், ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ளதுதான், இந்த அழகிய ஜோஷிமத் எனும் இந்த ஊர். இமயமலையில், சுமார் 6150 அடி உயரத்தில், பள்ளத்தாக்கில், இந்த இடம் இருக்கிறது. இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகும். 'விஷ்ணு பிரயாக்'கில், 'தவுலிங்கா' மற்றும் 'அல்காநந்தா' நதிகள் இணைந்து ஜோஷிமத் வழியே கடக்கின்றன.

இமயமலையில் மலையேறச் செல்பவர்களையும், பத்ரிநாத் புனிதஸ்தலத்திற்கு செல்பவர்களையும், முதலில் இந்த இடம்தான் வரவேற்கும். இந்த ஊரைச் சுற்றிலும், பார்த்து ரசிக்கக்கூடிய, நிறைய சுற்றுலாத்தலங்கள் உள்ளன. 'ஹேம் குந்த் சாஹிப்' எனும் முக்கிய மத சம்பந்தமான தலங்களுக்கு இந்த நகரின் வழியேதான் செல்ல வேண்டும். இதன் வழியே இராணுவ போக்குவரத்தும் நடைபெறுகிறது.

இந்த ஊரில், சுமார் பதினைந்தாயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதாலும், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளிருப்பதாலும், மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர். இந்த ஊரின் அபாயத்தைக்கருதி நிறைய பேர் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

நிறைய மக்கள் குடியேறி, வீடுகள் கட்டி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், இப்போது அடிக்கடி நலச்சரிவுகள் எஏற்படுவதால், யாரும் குடியேற பயப்படுகின்றனர். தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்க, சுமார் 570 வீடுகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் அப்படியே மண்ணில் புதைந்த பயங்கரமும் ஏற்பட்டிருக்கிறது. இதுவரை 3000 பேர்களுக்கு மேல் பாதிக்கப் பட்டு இருக்கின்றனர். அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றிருக்கின்றனர். நிபுணர்களும் வந்திருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

தகவலறிந்து ஜோஷிமத் நகருக்கு வந்த, உத்தரகாண்ட் முதல்வர், 'புஷ்கர் சிங் தாமி', பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

60 குடும்பங்களை வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்த முதல்வர், மேலும் 29 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தார். இன்னும் 570 குடும்பங்கள் பாதிருப்பதாக தெரிகிறது. இனி ஆறுமாத காலத்திற்கு, மாதம் ரூ.4000 , வாடகைக்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும், முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்திருக்கிறார்.

1950 முதலேயே இப்பகுதி ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மக்கள் வசித்தால், உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்தரவாதம் இல்லை எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்தநிலையில் இப்போது நிலைமை மோசமாகி வீடுகள் மண்ணில் புதையுமளவிற்கு ஆபத்தாகி விட்டது. ஜோஷிமத் நகர் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், மண்ணில் புதையப் போவதாகவும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஆய்ந்த, 'மிஸ்ரா' கமிஷன், 'ஜோஷிமத் நகரம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், மக்களின் எடையைத் தாங்கும் வலிமை பூமிக்கு இல்லை. எனவே அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கட்டுமான பணிகள், எதுவும் மேற்கொள்ளக்கூடாது எனவும்' அறிவுறுத்தியிருக்கிறது. நீரோடைகளின் அரிப்பும் மண் உறுதியை தரமற்றதாக ஆக்குகின்றன.

தற்போது இங்கு நடை பெற்றுவந்த, நீர் மின் திட்டப்பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள், கட்டுமானப்பணிகள், அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. மக்களின் பாதுகாப்பிற்கு பல நடவடிக்கைகளை, உத்தரகாண்ட் அரசு முன்னெடுத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com