அதானி விவகாரம்: ஜே.பி.சி. விசாரணை கோரி பிப். 6 இல் காங்கிரஸ் நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்

அதானி விவகாரம்: ஜே.பி.சி. விசாரணை கோரி பிப். 6 இல் காங்கிரஸ் நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்

அதானி குழுமம் முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி எல்ஐசி நிறுவனம் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன்பாக வரும் பிப்.6-ம் தேதி நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், "மத்திய அரசு சாமானிய மக்களின் பணத்தை எடுத்து அவர்களது நண்பர்கள் பயனடை உதவி செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிப்.6ம் தேதி (திங்கள்கிழமை) நாடுதழுவிய அளவில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது" என்றார்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை காலையில் மாநிலங்களையின் எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாடாளுமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ், சமாஜவாதி, பாரத ராஷ்ட்டிர சமிதி, திமுக, சிவசேனை, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதானி குழும விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாறணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தின.

ஒரு சுதந்திரமான விசாரணையின் மூலம் மட்டுமே பிரதமரின் அழுத்தத்தின் பெயரில் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பிற பொதுத்துறை நிறுனங்களை காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்தன. முன்னதாக நேற்று நாடாளுமன்றம் கூடியதும், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகி இருக்கும் ஹின்டென்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை மதியம் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. அதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால் இரண்டாவது நாளும் எந்த விவாதமும் நடைபெறாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com