தனது நிறுவன ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கி அசத்திய இந்திய நிறுவனம்!

தனது நிறுவன ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கி அசத்திய இந்திய நிறுவனம்!

Published on

கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கூட, பணி நீக்க நடவடிக்கையினை செய்து வரும் இப்படி ஒரு நெருக்கடியான நிலை மத்தியில் இந்திய ஐடி நிறுவனம் ஒன்று மிகப்பெரிய பரிசினை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியினை அளித்துள்ளது எனலாம். குஜராத்தினை சேர்ந்த ஐடி நிறுவனமான டிரித்யா டெக் என்ற ஐடி நிறுவனம் தனது நீண்ட நாள் ஊழியர்கள் பதிமூன்று பேருக்கு , 13 கார்களை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது.

சமீபத்தில் தான் இந்த நிறுவனம் இதன் 5 ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடி மகிழ்ந்தது . இது குறித்து டிரித்யா டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் மராந்த், தனது பயணம் தொடங்கியதில் இருந்து தன்னுடன் இருக்கும் தனது விசுவாசமான ஊழியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டதாக மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட நாள் ஊழியர்கள் நிறுவனத்தினை வளர்க்க அவர்களின் முந்தைய வேலையை விட்டு விட்டு தன்னுடன் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆக அவர்களுக்கு இந்த காரினை பரிசாக அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த கலாசாரம் இனியும் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிரித்யா டெக் நிறுவனம் ஒரு சாப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனமாகும். இது குறிப்பாக இ-காமர்ஸ், வெப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் என பல சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிறுவனம் அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும், ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தனது தொழில் சேவையினை செய்து வருகின்றது.

அகமதாபாத் நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது சர்வதேச அளவில் பல முண்ணனி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வந்துள்ள நிலையில் இந்திய ஊழியர்கள் மத்தியில் பெரும் ஆறுதலை கொடுத்து வந்துள்ளது. இது இந்தியா டெக் துறையில் அடுத்த கட்டத்தினை நோக்கி சென்று கொண்டுள்ளதை காட்டுகின்றது. இதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரித்தாலே இந்திய ஊழியர்களுக்கு போதுமான நம்பிக்கையை தருவதாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com