கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை வேறு இடத்திற்கு குடியேற்றும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு குடியேறிய மக்கள் தான் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் பயணித்துள்ளனர்.வெள்ளம் பாதித்த நபர்களை ஏற்றி சென்ற பேருந்து தீடிரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற பேருந்து நூரியாபாத் என்ற பகுதியை அடைந்த போது, பேருந்தின் ஏர் கண்டிஷன் யூனிட்டில் திடீரென தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் புகை ஏற்பட்டு மெல்ல வேகமாக தீ பரவத் தொடங்கியுள்ளது. தீப்பற்றியதை அறிந்து முதலில் விழித்துக்கொண்ட பயணிகள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.
பேருந்தில் பயணித்த சிலர் சமயோசிதமாகத் தப்பி பிழைத்த நிலையில், தீவிபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பல குழந்தைகளும் அடக்கம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றது.பேருந்தில் 35 பேர் பயணித்த நிலையில், சம்பவத்தில் சிக்கி காயமடைந்த பலரும் ஜம்ஷாரோ என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.