சந்திரனில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவின் மேல் பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. முதலில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றத்தொடங்கியது.
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலத்தை நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. புவி வட்டப்பாதையின் இறுதிச்சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்த விண்கலம் கடந்த ஒன்றாம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
நிலவை நோக்கிய பயணத்தில் மூன்றில் இரண்டு பங்கை சந்திரயான்-3 விண்கலம் நிறைவு செய்துள்ளது.
இது படிப்படியாக பல்வேறு கட்டங்களை அடைந்து, சந்திரனின் சுற்றுவட்டப் பாதைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றடைந்தது. அப்போது, சந்திரனின் மேல் பகுதியை படம்பிடித்து விண்கலம் அனுப்பியுள்ளது. இதனை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரனை சந்திரயான்-3 விண்கலம் சுற்றிவரும் வட்டப் பாதையின் உயரத்தை இரண்டாவது கட்டமாக விஞ்ஞானிகள் நேற்றிரவு 11 மணிக்கு குறைத்துள்ளனர். இதற்காக பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தின் என்ஜின் இயக்கப்பட்டது. சந்திரனின் வட்டப் பாதையில் குறைந்தபட்சம் 170 கிலோமீட்டர், அதிகபட்சம் 4 ஆயிரத்து 313 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற் தற்போது சந்திரயான்-3 விண்கலம் சுற்றிவருகிறது.
அடுத்தகட்டமாக வட்டப் பாதையை குறைக்கும் பணிகள், நாளை மறுதினம் மதியம் 1 மணிமுதல் இரண்டு மணிக்குள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.