நிலவை நெருங்கும் சந்திரயான் - 3..!
நிலவை நெருங்கி வரும் சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மேலும் குறைக்கப்படுகிறது.
சந்திரயான்-3 விண்கலத்தின் சந்திரன் வட்டப் பாதை அளவை குறைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகிறது.சந்திரனின் தென் துருவத்தை ஆய்வுசெய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இதன் புவிவட்டப் பாதை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 5-ஆம் தேதி சந்திரனின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது.
மேலும், சந்திரனை விண்கலம் சுற்றிவரும் உயரம் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் குறைக்கப்பட்டது. இது தற்போது குறைந்தபட்சம் 174 கிலோமீட்டர், அதிகபட்சம் ஆயிரத்து 437 கிலோமீட்டர் என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரனை சுற்றி வருகிறது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக வட்டப் பாதையின் உயரத்தைக் குறைக்கும் பணி, இன்று நடைபெறுகிறது. இதற்காக பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இன்று காலை கட்டளை பிறப்பிக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இறுதிக்கட்ட வட்டப் பாதை குறைப்புப் பணி, நாளை மறுதினம் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக, சந்திரனின் தென்துருவத்தில் வரும் 23-ஆம் தேதி மாலை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.