அறுவைச் சிகிச்சைக்காக மும்பைக்கு விரையும் கிரிக்கெட் வீரர்!

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் கடந்த வாரம் (டிச.30) ரூர்க்கியில் உள்ள தனது உறவினர்களை பார்க்கச் சென்ற போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அதிவேகத்தில் சென்ற கார் நிலைதடுமாறு தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.

இதனிடையே எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஹரியானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனர் இருவரும் விபத்தில் காரினுள் சிக்கிய ரிஷப் பந்த்தை மீட்டனர். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். தலை, முழங்கால், கை முட்டியில் அடிபட்டிருந்தது. கால்களில் தசைநார் கிழிந்தது.

டேராடூனில் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு முக்கிய அறுவைச்சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அவரை விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துவர முடிவு செய்யப்பட்டது.

இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியும் (பி.சி.சி.ஐ.) தெரிவித்துள்ளது. மும்பையில் கோகிலா பென் திரூபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தசைநார் கிழிந்ததற்கான அறுவைச்சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பி.சி.சி.ஐ. மருத்துவக் குழு மேற்பார்வையிடும்.

மருத்துவச் சிகிச்சையில் இருக்கும் ரிஷப் பந்த் குணமாகி வீடுதிரும்பும் வரையிலான அனைத்து செலவுகளையும் பி.சி.சி.ஐ. ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் லண்டனில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று பி.சி.சி.ஐ. கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கார் விபத்தில் ரிஷப் பந்த் படுகாயம் அடைந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தெரிவித்திருந்தனர். விரைவில் அவர் குணமடைந்தாலும் மீண்டும் அவரால் இந்திய அணிக்காக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com