ஆவணப்படத்தை பார்த்தால் கைதா? சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

ஆவணப்படத்தை பார்த்தால் கைதா? சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

பி.பி.சி நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அரசியல் குறித்து 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் பார்த்தால் கைது செய்தல் மற்றும் பார்ப்பதற்கு தடை என்பது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும். இதற்கு சட்டத்தில் ஏதும் இடமில்லை என சிபிஎம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபிஐ(எம்) கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அரசியல் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் பி.பி.சி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எழுந்துள்ள சவாலை சுட்டிக் காட்டுகிறது. குஜராத் இனப்படுகொலைகளை அன்றைய மோடி தலைமையிலான மாநில அரசு நிர்வாகம் எப்படி கையாண்டது என்பதில் புதிய ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய ஊடகங்களால் செய்ய முடியாத தரமான புலனாய்வினை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களையும், பாஜகவின் தரப்பையும் பேட்டியெடுத்து அதனை பார்வையாளர்கள் முன் அப்படியே வைத்திருக்கிறார்கள். மத்திய அரசாங்கம் இந்த ஆவணப்படத்தின் மீது அச்சம் கொண்டு, இணைய வெளியில் இருந்தே அகற்றி வருகிறது. அதற்காக ஐ.டி. சட்டத்தின் பிரிவுகள் (அவசர கால) தவறாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கை தவறானது, சட்ட விரோதம் என்பதை ஏற்கனவே எதிர்க்கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இணையத்தில் பார்க்க முடியாத ஆவணப்படத்தை ஆங்காங்கே பொதுமக்களும், ஜனநாயக அமைப்புகளும் திரையிடல் செய்து பார்த்து வருகிறார்கள். சென்னையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆவணப்பட திரையிடல் செய்வதை காவல்துறை தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களை கைது செய்துள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆவணப்படம் பார்ப்பதை பல்கலை கழக நிர்வாகம் தடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை.

ஆவணப்படத்தை பார்த்து செய்தியை தெரிந்து கொண்டு அதன்மீது முடிவு மேற்கொள்வது இந்திய குடிமக்களுக்கு உள்ள அடிப்படையான உரிமை ஆகும். ஆனால் அடிப்படை உரிமைக்கே விரோதமாக காவல்துறையும், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டுள்ளன. சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி,ஜனநாயக அமைப்புகள் முன்னின்று ஆவணப்பட திரையிடலையும், அதன்மீதான உரையாடலையும் முன்னெடுக்க உள்ளோம். பொதுமக்களின் பார்வையில் இருந்து உண்மைகளை மறைப்பது மென்மேலும் பிற்போக்கான சூழலுக்கே நாட்டை இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என அழுத்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com