ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை ஏன் திரும்பப்பெற்றது தெரியுமா?
நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் ரூ2,000 நோட்டுகளை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2016-ம் ஆண்டு நவ.8-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அதற்கு மாற்றாக, பொருளாதாரத்தில் ரூபாய் நோட்டுகளுக்கான தேவையை நிறைவுசெய்யும் வகையில் முதன்முதலில் புதிதாக ரூ.2000 நோட்டுகள் 2016 நவ.2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி சட்டம் 24(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொருளாதாரத்தில் இதர மதிப்புகளில் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்வதற்காகவே ரூ.2000 நோட்டுகள் அப்போது வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், கடந்த 2018-19-ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது புழக்கத்தில் உள்ள 89 சதவீத ரூ.2000 நோட்டுகள் கடந்த 2017 மார்ச் மாதத்துக்கு முன்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டவை ஆகும்.
எனவே, பொதுவெளியில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் என்பது தற்போதைய நிலையில் பெருமளவு குறைந்துவிட்டது.
கடந்த 2018 மார்ச் 31-ம் தேதி ரூ.6.73 லட்சம் கோடி மதிப்புக்கு புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகள் ரூ.3.62 லட்சம் கோடியாக குறைந்துவிட்டது. இது, மொத்த பணப் புழக்கத்தில் 10.8 சதவீதம் மட்டுமே.
இந்த நிலையில், ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தின் தேவையை நிறைவு செய்ய இதர மதிப்புடைய ரூபாய் நோட்டுகளே போதும் என்பதால் ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் முடிவுக்கு ரிசர்வ் வங்கி தற்போது வந்துள்ளது. ‘கிளீன் நோட் பாலிசி’ என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், சட்டப்பூர்வ அடிப்படையில் அந்தநோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்.
கால அவகாசம்: பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகளில் இதர மதிப்புடைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு செப்.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவும், வழக்கமான பணிகளைஅவர்கள் மேற்கொள்ள வசதியாகவும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.20,000 மதிப்பிலான நோட்டுகளை மட்டுமே ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். இதுதொடர்பாக, அனைத்து வங்கிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வங்கிகள் மட்டுமின்றி, ரிசர்வ்வங்கியின் 19 மண்டல அலுவலகங்களிலும் ரூ.2000 நோட்டுகளை வரும் செவ்வாய்க்கிழமை (மே 23) முதல் மாற்றிக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து ரூ.2000 நோட்டுகளையும் புழக்கத்தில் இருந்து அகற்ற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ள நிலையில் வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வங்கி தெரிவித்துள்ளது.
“கடந்த 2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு என்ற தவறான முடிவை மூடி மறைக்க ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சில வாரங்களிலேயே ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இனி ரூ.1,000 நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
எதையும் செய்த பிறகு சிந்திப்பதே விஸ்வகுரு என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியின் வழக்கமாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அறிக்கை வெளியிட மத்திய அரசு தயாரா என கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. பினோய் விஸ்வம் சவால் விட்டுள்ளார்.
இதனிடையே மத்திய அரசின் இரண்டாவது சர்ஜிகல் நடவடிக்கையாகும் இது. இதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.