தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்கள் இழுத்தடிப்பு! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாகக்கூறி, தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு, உச்சநீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதியத்திற்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த கே.லட்சுமணன் என்பவர் தனது பணி ஒழுங்குபடுத்தப்படுவதற்கு முன் உள்ள சேவையை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அவர் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவ்வாறு கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு மறுத்துள்ளது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி, அந்த பணியாளருக்கான ஓய்வூதிய பலன்களை வழங்குமாறு 2017ம் ஆண்டு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், லட்சுமணனுக்கான ஓய்வூதிய பலன்களை எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீண்டும் அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, அடிப்படையே இல்லாமல் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு , ஒரு தூய்மைப் பணியாளர், தனது ஓய்வூதிய உரிமைகளை பெறுவதற்கு ஏற்கனவே பல வழக்குகளை சந்தித்து வந்துள்ளார். தேவையில்லாமல் ஒரு தூய்மைப் பணியாளரின் ஓய்வூதிய உரிமைகள் தொடர்பான விஷயத்தை, மேலும் மேலும் வழக்குகளுக்குள் இழுத்துச் செல்ல முற்படுகின்றனர் என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.