"பால் சாப்பிடுங்கள்" ம.பி.யில் உமாபாரதி புதுமைப் போராட்டம்!

"பால் சாப்பிடுங்கள்" ம.பி.யில் உமாபாரதி புதுமைப் போராட்டம்!

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி. மக்களிடம் குடிபழக்கத்தை ஊக்குவித்து அதன் மூலம் வருவாய் ஈட்ட அரசு முயலக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அவர் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார். இதற்காக போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் கோவில்களும் அரண்மனைகளும் நிறைந்த நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சா நகரில், புதுமையான முறையில் மதுவிலக்கு போராட்டத்தை உமாபாரதி நடத்தினார். அதாவது மதுக்கடைகளின் முன்பு பசுமாடுகளை கொண்டுவந்து கட்டி “மக்களே மதுவை குடிக்காதீர்கள். மது குடிப்பதை கைவிட்டு அதற்கு பதிலாக பால் சாப்பிடுங்கள்” (ஷாராப் நஹீ, தூத் பியோ) என்று கோஷங்கள் எழுப்பி பிரசாரம் செய்தார்.

ம.பி. முன்னாள் முதல்வராக இருந்த அவர், செளஹான் தலைமையிலான அரசு குடிப்பழக்கத்தை மக்களிடம் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாய் திரட்டக்கூடாது. மாநில அரசு மதுவிலக்கை

அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மதுவிலக்குக்கு எதிராக உமாபாரதி போராட்டம் நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுக்கடைகள் மீது சாணத்தை தூக்கியெறிந்து போராட்டம் நடத்தினார். மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுக்கடைகள் மீது கற்களை வீசியும் போராட்டம் நடத்தினார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவரது மதுவிலக்கு போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும் காங்கிரஸ் ஆட்சி வெகுநாள் நீடிக்கவில்லை. 15 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

கடந்த முறை மதுக்கடை மீது சாணத்தை தூக்கி எறியும் போராட்டம் நடைபெற்றபோது விற்பனையாளர் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் கடையை மூடிவிட்டுச் சென்றார்.

தற்போதுள்ள முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், துணிச்சல் மிகுந்தவர். தற்போதுள்ள மதுபானக் கொள்கைகளில் சில குறைபாடுகள் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். யோகா குரு ராம்தேவின் யோசனையுடன் அவர் புதிய கொள்கையை அறிவிக்கக்கூடும் என்று நம்புவதாக உமாபாரதி கூறியுள்ளார்.

எனினும் உமாபாரதியின் இந்த கருத்துக்கு பதிலளிக்க செளஹான் மறுத்துவிட்டார். புதிய மதுக் கொள்கை குடிப்பதை நிறுத்தும் வகையில் இருக்கும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com