மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறிய விவசாயிகள்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போலீஸ் தடுப்புகளை உடைத்து முன்னேறிய விவசாயிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் இரண்டு வார காலத்துக்கும் மேல் நீடித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18ம் தேதி தொடங்கிய நிலையில், மூன்று மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது இந்தப் போராட்டம். அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 23ம் தேதியில் இருந்து மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டெல்லியில் நேற்று இரவு 7 மணியளவில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வீரர், வீராங்கணைகள் சென்றனர். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி.உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும், அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்தது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள விவசாய சங்கத் தலைவர்கள் பலர், போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை வழங்குவார்கள்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே, அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஓராண்டு காலம் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாய அமைப்புகளை, இந்த சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம்தான் முன்னெடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது. மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்துக்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரி சில தினங்களுக்கு முன் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். வீரர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினை வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறி இருக்கிறார்.

இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, ‘பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’ எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்பட, பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் அணி அணியாகத் திரண்டு டெல்லிக்கு படையெடுத்தனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தின் கீழ் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் ஒன்று திரண்டு உள்ளனர். இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்போது, ‘விவசாயிகளின் ஒரு பிரிவினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்றனர். தடுப்பான்கள் அமைத்த நுழைவு பகுதியில், அவசர அவசரத்துடன் சென்ற அவர்களில் சிலர் தர்ணா போராட்டப் பகுதிக்கு செல்வதற்காக தடுப்பான்கள் மீது ஏறினர். இதில் தடுப்பான்கள் கீழே விழுந்தன. இதனால், அவர்கள் அதனை வீசி விட்டு முன்னேறினர். அமைதியை காக்கும்படியும், சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ளும்படியும் பொதுமக்களிடம் கூறப்பட்டு இருக்கிறது’ என தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com