
கர்நாடகாவில் ஹிஜாப் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கா்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப்ரவரி 5-ம் தேதி அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் மூண்டது.
இதைத்தொடர்ந்து முஸ்லிம் மாணவிள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஹிஜாப் அணிவது கட்டாயம் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்படவில்லை என்றதுடன், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி பரபரப்பு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா இன்று தன் உத்தரவில் ‘’கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்தது செல்லுபடியாகும்’’ என தெரிவித்துள்ளார். மற்றொரு நீதிபதியான சுதன்ஷு துலியா, ‘’ஹிஜாப் அணிவது அவரவர் சொந்த விருப்பம்’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கு 9 நீதிபதிகள் கொண்ட மற்றொரு அமர்வுக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து.