பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவது போன்ற ஆடியோ வெளியிடப்பட்ட, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் இம்ரான்கான் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இம்ரான் கான் தொலைபேசியில் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக உரையாடி, அவரை தன் இல்லத்துக்கு வருமாறு இம்ரான் கான் கேட்பது போன்ற ஒரு ஆடியோ பதிவை அந்நாட்டு செய்தியாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தானில் பல்வேறு அரசியல் கட்சியினர் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இம்ரான்கான் இதுகுறித்து எந்த விளக்கமும் இதுவரை சொல்லவில்லை. ஆனால் இம்ரான் கானின் நற்பெயரை கெடுப்பதற்காக அவரது அரசியல் எதிரிகள் வெளியிட்ட போலி ஆடியோ இதுவென்று அவரது ஆதரவாளர்களும் இம்ரானின் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியும் மறுப்பு தெரிவித்துள்ளது.