இந்தியாவினுடைய உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி துறைகள் கடந்து 5 ஆண்டுகள் வளர்ச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சர்வதேச வர்த்தக செயல்பாட்டில் பெருமளவில் சீனாவை நம்பியே இருப்பதாக சொல்லப்படும் கூற்றை அரசு விளக்க வேண்டும் என்றும் மற்றும் இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்குமான சந்தை மதிப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய வர்த்தக இணையமைச்சர் அனுபிரியா படேல் எழுத்து பூர்வமாக அளித்த பதில் குறிப்பிட்டு இருப்பது, இந்தியாவும் சீனாவும் வர்த்தக ரீதியான நெருங்கிய தொடர்பில் உள்ளன. சீனாவில் இருந்து மூலதன பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், மூலப்பொருட்கள், மின்னணு பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், டெலிகாம் கருவிகள் ஆகியவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் தற்போதைய கால சூழலில் வளர்ந்து வரும் துறை சார்ந்த பொருட்களாகும்.
இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகளில் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் இந்தியாவினுடைய உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி துறையில் 36.6 சதவீதம் இந்தியாவினுடைய வர்த்தகம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா 450. 95 பில்லியன் டாலர் ஏற்றுமதி செய்திருக்கிறது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது 35 சதவீதம் அதிகம்.
இறக்குமதி துறையை பொருத்தவரை இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் 38.8 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதேசமயம் கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 714.04 பில்லியன் டாலர் இறக்குமதி நடைபெற்று உள்ளது. இது அதற்கு நிதியாண்டை ஒப்பிடும்போது 40 சதவீதம் அதிகமாகும் என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.