பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் வலுவான உறவிற்கு வழி வகுத்துள்ளது:வெள்ளை மாளிகை அறிக்கை!

 பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Updated on

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை குறிப்பிட்டு, முன்பை விட தற்போது இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் வலுவடைந்து இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஜூன் 21 ஆம் தேதி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணம் ஆக சென்றிருந்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களில் இந்தியா அமெரிக்க நாடுகள் கையெழுத்திட்டன. குறிப்பாக ராணுவ தளவாடங்கள், ராணுவத்திற்கான ட்ரோன்கள்  என்று முக்கிய ஒப்பந்தங்களும் அதில் அடங்கும்.

மேலும் இந்திய பிரதமர் மோடி மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களினுடைய உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் பல்வேறு வகையான பொருளாதார நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜீன் பியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் முக்கிய மைல்கல்லாக மாறி இருக்கிறது.இந்தியா அமெரிக்கா உறவுகளை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான செயல் திட்டங்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவே கருதப்படுகிறது.

பாதுகாப்பு, வணிகம் என்று பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இவை கடந்த காலங்களை விட தற்போது இந்தியா அமெரிக்கா இடையேயான  உறவின் மேம்பாட்டை அதிகரித்திருக்கிறது. இது இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை நீண்ட கால உறவாக, வலுவான உறவாக தொடர்ந்து கொண்டு செல்ல உதவும் என்று  குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com