காஷ்மீர் தனி நாடா? பீகார் வினாத் தாளில் அதிர்ச்சிக் கேள்வி!

காஷ்மீர்
காஷ்மீர்

 பீகார் மாநிலம் கிஷன்கஞ்சில் அமைந்துள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின்போது, ஆங்கில வினாத்தாளில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 அந்த கேள்வித்தாளில் ‘’சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் மக்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள்?”’ என்று கேட்கப்பட்டது.

சீனா, நேபாளம், இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் தனித்தனி நாடுகள், ஆனால் இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள காஷ்மீரும் தனி நாடு என்பதுபோல் இந்தக் கேள்வி அமைந்துள்ளதால், அங்கு பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

 இதுபற்றி அந்த பள்ளியின்  தலைமை ஆசிரியர் ‘’ இந்த வினாத்தாள் பீகார் கல்வி வாரியம் மூலம் பெறப்பட்டது. தனித்தனி நாடுகளின் வரிசையில் காஷ்மீரும் இடம்பெற்றது தவறுதலாக நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு. வேறெந்த உள்நோக்கமும் கிடையாது’’ என்று பதிலளித்துள்ளார்.

 ஆனால் பாஜக கட்சியின் முன்னணி தலைவர் சுஷாந்த் கோபே இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ‘பீகாரில் கூட்டணி அரசின் செயல் இது! குழந்தைகளின் மனதில் காஷ்மீரையும் இந்தியாவையும் பிரிக்கும் முயற்சி நடக்கிறது.

இது தவறான எண்ணம். வரும் தேர்தலுக்கு முன் அரசியல் செல்வாக்கு பெற நிதிஷ்குமார் திட்டமிட்டு வருகிறார். அதில் ஒரு பகுதிதான் இந்தக் கேள்வி’’  என கடுமையாக குற்றம் சாட்டினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com