பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்க்கலாம் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியொரு வதந்தியை கிளப்பிவிட்டவர் யார் தெரியுமா? ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நாடாளுன்ற குழுத்தலைவர் உபேந்திர குஷ்வாஹாதான்.!
நான், பா.ஜ.க. தலைவர்கள் சிலரை சந்தித்ததை வைத்து நான் மீண்டும் பா.ஜ.க.வில் சேரப்போவதாக கூறிவருகின்றனர். ஆனால், என்னைவிட எங்கள் கட்சியில் உள்ள பெரிய தலைவர் ஒருவர் (நிதிஷ்குமார்) பா.ஜ.க. தலைவர்களுடன் அதிகம் தொடர்பு கொண்டு பேசிவருகிறார் தெரியுமா? என்று குஷ்வாஹா குறிப்பட்டிருந்தார். இதனால் அவர் நிதிஷ்குமாராக இருக்குமோ என்ற வதந்தி பரவியது.
பா.ஜ.க. தலைவர்களை நான் சந்தித்து வருவதை அடுத்து மிகப் பெரிய பேரம் நடப்பதாக பலரும் பேசி வருகின்றனர். அதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. யார் வேண்டுமானாலும் தனிப்பட்ட முறையில் எவருடனும் தொடர்பு கொண்டு பேசலாம். எனது கட்சிகூட பா.ஜ.க.வுடன் இரண்டு மூன்று முறை பேசிவிட்டுத்தான் கூட்டணியிலிருந்து வெளியே வந்தது. எந்த ஒரு கட்சியும் ஒரு உத்தியை பின்பற்றிதான் செயல்படும். ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் நான் நீடிப்பேனா மாட்டேனா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
உபேந்திர குஷ்வா இப்படி பேசியுள்ளது நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்திருக்கிறாரோ என்ற வதந்தியை உலவவிட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர்களுக்கும், அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் வலுத்து வருகின்றன. லாலு கட்சியினர் இப்போதெல்லாம் நிதிஷ்குமாரை வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் நிதிஷ்குமார் பா.ஜ.க.வுடன் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்ற வதந்தி உலவத்தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக நிதிஷ்குமாரிடம், உபேந்திர குஷ்வாஹா பா.ஜ.க.வில் இணையும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்டதற்கு, அவர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருப்பது, வெளியேறுவது மீண்டும் வருவது வாடிக்கையாகிவிட்டது. எனினும் தில்லி சென்றுள்ள அவர் வந்த பிறகுதான் உண்மைநிலை தெரியவரும் என்றார்.