பிரதமர் மோடி சந்தித்த கன்னட சினிமா கலைஞர்கள்- ஏன் தெரியுமா?
கன்னட சினிமா கலைஞர்களான நடிகர்கள் யஷ், ரிஷப்ஷெட்டி ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று யெலஹங்கா விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது கன்னட சினிமா பிரபலங்களான மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி ராஜ்குமார், ‘கே.ஜி.எஃப்’ புகழ் யஷ், ‘காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர், யூடியூப்பர் ஐயோ ஷரத்தா ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அப்போது நடந்த கலந்துரையாடல் குறித்து பதிவிடப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், பெங்களூருவில் கர்நாடக திரையுலக பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அவர்களுடன் கலாசாரம், புதிய இந்தியா மற்றும் கர்நாடகத்தின் முன்னேற்றம் தொடர்பான பல விஷயங்கள் குறித்து கலைஞர்களுடன் பிரதமர் விவாதித்தார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் கலாசார அடையாளத்தை ஊக்குவிப்பதற்காகவும், திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும் தென்னிந்திய சினிமாவின் முயற்சிகளை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு குறித்து யூடியூப்பரான ஷ்ரத்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ வணக்கம்.. ஆம் நான் நமது நாட்டின் பிரதமரை சந்தித்தேன்; அவர் என்னிடம் முதலில் சொன்ன வார்த்தை ‘Aiyyo’ என்பது. நான் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.