இன்று பதவியேற்ற கர்நாடக அமைச்சரவை பத்து பிரபலங்கள்!

இன்று பதவியேற்ற கர்நாடக அமைச்சரவை பத்து பிரபலங்கள்!

மீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையைப் பெற்று இருக்கிறது. சில உட்கட்சி பூசல்களுக்குப் பிறகு அந்த மாநிலத்தின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவர்கள் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று உள்ளனர்.

இதன்படி, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக கே.டி.சிவகுமாரும் பதவியேற்க இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து, கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்.பி.பட்டீல், கே.ஜே.ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகிய எட்டு பேர்களும் அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர். இதில் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் கே.டி.சிவகுமார் குறித்த விவரங்கள் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததுதான். இனி, அமைச்சர்களாக பதவியேற்று உள்ள எட்டு பிரபலங்கள் குறித்துக் காண்போம்.

பரமேஸ்வர்: இவர் துமகூர் மாவட்டம், கொரட்டகெரே சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஏழு ஆண்டுகள் கர்நாடகா மாநில தலைவராகச் செயல்பட்டவர். 2013ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது இவர்தான் மாநிலத் தலைவராக இருந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் இவர் தோல்வியடைந்ததால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. பிறகு 2018ல் கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது துணை முதல்வரானார். இந்தத் தேர்தல் முதலமைச்சர் தேர்வு ரேசில் இவரது பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கே.எச்.முனியப்பா: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். இவர் ஏழு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய அமைச்சராக பல்வேறு துறைகளை நிர்வகித்த அனுபவம் இவருக்கு உண்டு. கடந்த 2019 தேர்தலில் கோலார் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி கண்ட நிலையில், நடப்பு சட்டசபை தேர்தலில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக தேர்வு பெற்று இருக்கிறார். இவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராவார்.

ராமலிங்க ரெட்டி: இவர் பெங்களூரு பிடிஎம் லே-அவுட் தொகுதியைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதியில் இவர் எட்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். நிதி, போக்குவரத்துத் துறை, தொழில்துறை, பள்ளி கல்வித்துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்து நிர்வகித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2013 - 2018 சித்தராமையா ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், பெங்களூரு பொறுப்பு அமைச்சராகவும் செயல்பட்டார். இவர் ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்.

கே.ஜே.ஜார்ஜ்: பெங்களூரு சர்வக்ஞ நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இவர், இந்தத் தொகுதியில் கடந்த 2008, 2013, 2018ல் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது முறையாக இப்போதும் வெற்றி பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு பாரதிநகர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தார். முன்பு சித்தராமையா அமைச்சரவையில் பெங்களூரு நகர வளர்ச்சித் துறை, உள்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமீர் அகமது கான்: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக ஜமீர் அகமது கான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த இவர், சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இவர் ஏற்கெனவே ஜேடிஎஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். 2004 முதல் 2013 வரை ஜேடிஎஸ் சார்பில் அதே தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2018ல் வெற்றி பெற்றவர், இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.

எம்.பி.பாட்டீல்: இவர் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராவார். லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், விஜயாப்புரா மாவட்டம், பபலேஷ்வரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் இந்தத் தொகுதியில் நான்காவது முறையாக தொடர்ந்து வெற்றி கண்டு இருக்கிறார். துணை முதல்வர் பதவியை எதிர்பார்த்த நிலையில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சதீஷ் ஜார்கிகோளி: பெலகாவி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கும் இவரது மூன்று சகோதரர்களும் அரசியலில் உள்ளனர். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளரான இவர், பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். பெலகாவி மாவட்டம், எமகனமரடி தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என நான்கு முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இவரும் ஏற்கெனவே சித்தராமையா அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து இருக்கிறார்.

பிரியங்க் கார்கே: இவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன். இவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் கலபுரகி மாவட்டம், சித்தராபூர் தொகுதியில் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார். சித்தராபூர் தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2008ல் மல்லிகார்ஜுன கார்கே இருந்தார். இதையடுத்து அவர் 2009 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் அவரது மகன் பிரியங்க் கார்கே போட்டியிட்டு தோல்வி கண்டார். அதன் பிறகு 2013 தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். மீண்டும் 2018ல் வெற்றி பெற்ற அவர், மறுபடியும் அதே தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com