விலை வீழ்ச்சியைக் கண்டித்து 'வெங்காய தகனம்' செய்து போராட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர விவசாயிகள்!
மகாராஷ்டிராவில் வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அரசுக்கு எதிராக விவசாயிகள் வெங்காயத்தை நெருப்பில் இட்டு போராட்டம் நடத்தினர். அதனால் இந்த வருடம் மகாராஷ்டிர விவசாயிகள் ஹோலிகா தகனத்திற்குப் பதிலாக வெங்காய தகனம் நடத்தி அரசுக்குத் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் விவசாயி ஒருவர், அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் அவல நிலையை எடுத்துரைக்கும் வகையிலும் வெங்காய செடிகளுக்கு நெருப்பு மூட்டினார்.
மகாராஷ்டிராவில் ஹோலிகா பண்டிகையை முன்னிட்டு நெருப்பை எரித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆசியாவின் மிகப்பெரிய மொத்த வெங்காய சந்தையான நாசிக்கில் உள்ள லாசல்கானில் உள்ள விவசாய உற்பத்தி சந்தைக் குழுவில் (ஏபிஎம்சி) சமையலறை மூலப்பொருட்களின் விலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விவசாயிகள் நெருக்கடியுடன் போராடி வருகின்றனர்.
ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.2 முதல் ரூ.4 வரை குறைந்ததால், விவசாயிகள் கொதிப்படைந்து கடந்த வாரம் ஏபிஎம்சியில் ஒரு நாள் ஏலத்தை நிறுத்தினர்.
யோலா தாலுகாவில் உள்ள மாதுல்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா டோங்ரே, தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயப் பயிரைக் தீயிட்டுக் கருக்கியதுடன், அந்த வெங்காய தகன போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சகலருக்கும் அழைப்பிதழ் அனுப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
“மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அவர்களின் தலைவிதிக்கு விட்டுவிட்டன.அவர்களின் அதிகாரப் போராட்டத்தில், விவசாயி பிழைக்கிறாரா, சாகிறாரா என்பதில் அரசு கவனம் செலுத்துவதில்லை. இது மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தேசத்துக்கே ஒரு கறுப்பு நாள் தான். ஏனெனில், ஒரு விவசாயிக்கு தான் பாடுபட்டு விளைவித்த வெங்காயத்தை தன் கையாலேயே கொளுத்த வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டதே, அதனால் தான் என்றவர் அரசாங்கத்தின் கொள்கைகளை ஒட்டுமொத்தமாகக் குற்றம் சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் நாசிக் மாவட்டத்திலும், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கோபமடைந்து ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 27 அன்று லாசல்கான் ஏபிஎம்சியில் வெங்காய ஏலத்தை மகாராஷ்டிரா ராஜ்ய கண்ட உத்பதக் சங்கதானா (எம்ஆர்கேயுஎஸ்) நிறுத்தியது.
கடந்த வாரத்தில் சந்த்வாட் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மாநிலம் முழுவதும் இதே போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை, கோபமடைந்த விவசாயிகள் நாசிக் மாவட்டம் நிபாத் தாலுகாவில் உள்ள ஷிராஸ்கானில் மத்திய அமைச்சர் பாரதி பவாரை மறித்து மறியல் செய்தனர். அவர்கள், வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறும்போது, வெங்காயத்திற்கு நல்ல விலை ஏன் கிடைக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெங்காயத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 மானியமாக அறிவித்து, தற்போது கிலோ ரூ.3.4, 5 என விற்கப்படும் விளைபொருட்களை கிலோ ரூ.15 முதல் ரூ.20க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் சங்க தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். .
பிப்ரவரியில், சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது 512 கிலோ வெங்காயத்தை மாவட்டத்தில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்றதில் வெறும் 2.49 ரூபாய் லாபம் ஈட்டியதை அறிந்தபோது, அதிர்ச்சியடைந்தார்.
சோலாப்பூர் மார்க்கெட் மொத்த வியாபாரத்தில் தனது வெங்காய விளைச்சலுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 1 விலை கிடைத்துவிட்டதாகவும், அனைத்து விலக்குகளுக்குப் பிறகு இந்த அற்பத் தொகையை நிகர லாபமாகப் பெற்றதாகவும் விவசாயி கூறினார்.
வெங்காயத்தின் விலை சந்தையில் கிலோ 2 ஆக சரிந்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் தங்கள் பயிர்களை எரித்தும், வெங்காயத்தை சந்தையில் இலவசமாகக் கொட்டியும், சாலைகளில் வீசியும் வருகின்றனர். "இந்தப் பிரச்சினையை முறைப்படுத்தாமல் விட்டால், விவசாயிகளின் கோபம் கட்டுப்பாட்டை மீறும்" என்று விவசாயி சஞ்சய் பாட்டீல் கூறினார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சமீபத்தில் சட்டப்பேரவையில் கூறியதாவது: இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு 18,743 குவிண்டால் வெங்காயத்தை சந்தையில் இருந்து கொள்முதல் செய்துள்ளது.
விவசாயிகள் வெங்காயத்தை பாரதப் பிரதமருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர்
மஹாராஷ்டிராவில் உள்ள அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் குழு, வெங்காயத்தின் விலை வீழ்ச்சியிலிருந்து நிவாரணம் மற்றும் பயிர் ஏற்றுமதி மீதான தடையை நீக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலம் வெங்காயத்தை அனுப்பியுள்ளனர். பிரதமருக்கு வெங்காய சரக்கு பார்சல் செய்யப்பட்டுள்ளது, என ஷேத்காரி சங்கதானா மற்றும் ஷேத்காரி விகாஸ் மண்டலை சேர்ந்த விவசாயிகள் திங்கள்கிழமை கூறியதுடன், தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.