எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழ் பெண்ணுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

ன்முகத் திறமை கொண்ட முத்தமிழ்ச்செல்வி விருதுநகர் மாவட்டம், ஜோயல்பட்டியைச் சேர்ந்தவர். 34 வயதாகும் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளோடு சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் வசித்து வருகிறார். ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளரான இவர், வில் வித்தை, குதிரையேற்றம் மற்றும் கண்களை மூடியவாறு மலையில் இருந்து இறங்குவதில் சாதனை படைத்து இருக்கிறார்.

மிகுந்த மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்ட முத்தமிழ்ச்செல்லி, பயிற்சியாளர் திரிலோகசந்தர் உதவியோடு எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்று பயிற்சிகள் மேற்கொண்டிருந்தார். ஆனால், பொருளாதார வசதியின்றி தவித்த நிலையில் இருந்த அவரது நிலையை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் அழைத்து அவருக்கு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு 15 லட்சம் ரூபாயை தனது சார்பில் அளித்து இருக்கிறார்.

இந்த உதவியை வைத்து தனது எவரெஸ்ட் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் முத்தமிழ்ச்செல்வி. அதையடுத்து அவர், கடந்த 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் 8,848.86 மீட்டர் உயரத்தை அடைந்ததோடு, அந்த சாதனைப் பயணத்தை வீடியோ பதிவாகச் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பயிற்சியாளர் திரிலோகசந்தர் ஆகியோருக்கு அனுப்பியதோடு, நன்றியும் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து, இன்னும் சில தினங்களில் விமானம் மூலம் சென்னைக்குத் திரும்ப உள்ளார். சாதனைப் பெண் முத்தமிழ்ச்செல்வியை சிறப்பாக வரவேற்க விளையாட்டுத் துறை சார்பில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எவரெஸ்ட் சிகரம் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கி இருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி. அவரது பயணத்துக்கு கழக அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 25 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பி உள்ளார். தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனைப் பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com